பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,300 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் நிலவரப்படி விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி, படிப்படியாக அதிகரித்து.
தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.