சென்னை: சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி டி.எஸ்.பி. காதர் பாட்ஷா தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு நடந்த சிலை கடத்தல் வழக்கில் டி.எஸ்.பி. காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டார். இதையடுத்து 2017 ஜூன் 29ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறக்கோரி காதர் பாட்ஷா அளித்த மனுவை தமிழக அரசு நிராகரித்து கடந்த ஜனவரி 18ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இன்று (மே 31) பணி ஓய்வுபெற இருப்பதை தெரிந்துகொண்டே தனது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தான் பணியாற்றியபோது, திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் மரகத லிங்கம் உள்ளிட்ட 53 சிலைகளை மீட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும், தனது பணியை முதல்வர் மற்றும் அதிகாரிகள் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளில் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றபோதிலும், இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக உள்துறை செயலாளரும், டிஜிபி.யும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.