புதுடெல்லி: இந்தியர்கள் உட்பட 10,000 பேரை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. டிஎக்ஸ்சி என்ற அமெரிக்க நிறுவனம் 2017ம் ஆண்டு சிஎஸ்சி மற்றும் எச்பி என்டர்பிரைசஸ் உடன் இணைக்கப்பட்டு உருவானது. அவ்வாறு இணைக்கப்பட்டபோது இந்த நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 1.7 லட்சம். இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனத்தில் 43,000 பேர் பணி புரிகின்றனர். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சவாலானதாகவே உள்ளது. 2017-18 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் ₹2,702 கோடி. இதற்கு முந்தைய ஆண்டில் இது ₹2,808 கோடியாக இருந்தது.
₹305 கோடியாக இருந்த நிகர லாபம் ₹276 கோடியாக குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற நபர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் இந்தியாவில் இந்த நிறுவனத்துக்காக பணி புரிபவர்கள் என கூறப்படுகிறது.