பெரம்பூர்: சென்னை காசிமேட்டில் ஐஸ் பேக்டரியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஐஸ் பேட்டரி உள்ளது. இங்கு சுமார் 5 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (30) என்ற ஊழியர் அமோனியா வாயு சிலிண்டரில் கூலிங் ஆயிலை நிரப்பினார். அப்போது சிலிண்டரில் உள்ள வால்வு பகுதியில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் காசிமேடு சூரியன் நாராயணன் சாலை, பூண்டி தங்கமாள் தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு மின்பிடி துறைமுக போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ராயபுரம் தீயணைப்பு துறையினர் வந்து அமோனியா வாயு சிலிண்டரை தண்ணீரை பீய்ச்சியடித்து கசிவை சரி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் ஐஸ் கம்பெனி உதவி மேலாளர் ராமமூர்த்தி என்பவரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.