×

சிவகாசியில் பரபரப்பு விசாரணைக்கு சென்ற கைதி திடீர் மரணம்: போலீசார் அடித்துக் கொன்றதாக மனைவி புகார்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முத்துராமலிங்கம் காலனியை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). மனைவி பஞ்சவர்ணம். 2 குழந்தைகள் உள்ளனர். பல்வேறு திருட்டு சம்பவங்களில் ராமச்சந்திரன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை செய்ய சிவகாசி கிழக்கு போலீசார், ராமச்சந்திரனை கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை விசாரித்துள்ளனர். நேற்று காலை ராமச்சந்திரன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். போலீசார், அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதனிடையே போலீசார் தாக்கியதால்தான் ராமச்சந்திரன் இறந்தார். உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிவகாசி சார்பு நீதிபதி சந்தனக்குமார் நேற்று மாலை ராமச்சந்திரனின் உறவினர்களிடம் விசாரித்தார். மேலும், அவரது முன்னிலையில் ராமச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து ராமச்சந்திரன் மனைவி பஞ்சவர்ணம் கூறுகையில், ‘‘எனது கணவரை 2 நாட்களுக்கு முன்பு, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை அடித்து கொன்று விட்டன’’ என்றார்.

Tags : death ,prisoner ,Sivakasi , Sivakasi, trial, prisoner sudden death
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து