மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் பகுதியில் நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: என்னை மீண்டும் பிரதமராக்க முடிவு செய்துள்ளதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கம்ருப் வரை ஒட்டு மொத்த நாடும் ேமாடி அரசு வெற்றி பெறும் என்று கூறுகிறது. பாஜ நிச்சயமாக 300 இடங்களில் வெற்றி பெறும். மீண்டும் மோடி அரசு அமையும். ஞாயிறன்று நீங்கள் உங்கள் வாக்குகளை பதிவு செய்வதோடு, புதிய வரலாறும் படைக்க உள்ளீர்கள். பல ஆண்டுகளுக்கு பின்னர் 2வது முறையாக மீண்டும் ஒரு தனிப்பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள்.,
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 130 கோடி இந்தியர்களின் தேர்வாக இருக்கிறது. எனது மக்களவை தேர்தல் பிரசாரமானது உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் தொடங்கப்பட்டது. இப்போது, இதோ இந்த கார்கோனில் எனது கடைசி தேர்தல் பிரசாரத்தை முடி்க்கிறேன். மீரட்டுக்கும் கார்கோனுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. இந்த இரண்டு நகரங்களும் 1857ம் ஆண்டு சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடையவை. மீரட்டில் இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக புரட்சி செய்தனர். கார்கோனில் சுதந்திர போராட்ட வீரர் பீமா நாயக் தலைமையில் பழங்குடியின மக்கள் போராட்டம் நடந்தது.இவ்வாறு அவர் பேசினார்.