×

அதிமுக துரோகிகளை கூண்டோடு காலி செய்யுங்கள்: பிரசாரத்தில் டி.டி.வி. வேண்டுகோள்

திருப்பரங்குன்றம்: அதிமுக துரோகிகளை கூண்டோடு காலி செய்யுங்கள் என டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மதுரை நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி, வடிவேல்கரை, வடபழஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: பொய்களையே பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமார், என்னை ஆர்கே நகருக்கு சென்றுள்ளாரா என்கிறார். ஆர்.கே.நகரில் உள்ள ராயபுரத்தில்தான் ஜெயக்குமாரின் வீடு இருக்கிறது. தன் சொந்த ஊரிலேயே இவரது கட்சியால் ஜெயித்துக் காட்ட முடியவில்லை.
சசிகலா சிறைக்கு செல்லும்போது துரோகம் செய்த பன்னீர்செல்வத்தை நீக்கி எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தார். அவர் நாலு காலில் தவழ்ந்து வந்து பதவி ஏற்றார். அன்றைக்கு என்னை சசிகலா முதல்வராக்க முடியாதா? எங்களையே கட்சியை விட்டு நீக்கியவர்களுக்கு, ‘ஓபனிங் பேட்ஸ்மேன்’ ஆக களம் இறங்கி, துரோகிகள் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று டெபாசிட் வாங்கவிடாமல் ஆர்கே நகர் மக்கள் செய்தார்கள். மதுரை மக்களும் இவர்களுக்கு தோல்வியைத் தர வேண்டும்.


எடப்பாடிக்கு மக்களைப் பற்றிய சிந்தனை எல்லாம் இல்லை. டெண்டர், கமிஷன், சம்பந்தி குடும்பம் என்றுதான் இருக்கிறார். நாக்கு அறுக்கும் ராஜேந்திர பாலாஜியை ‘மந்திரவாதி’, ‘கேடி’ பாலாஜி என்றே மக்கள் கூறி வருகின்றனர். உதயகுமார் அன்றைக்கு சசிகலாதான் முதல்வராக வர வேண்டும் என்றார். ஆனால் இப்போது, ‘அவர் ஜெயிலில் இருக்கிறார். அவரைப்பற்றி பேச வேண்டாம்’ என்கிறார். மே 19ம் தேதி தேர்தலில் அதிமுக துரோகிகளை கூண்டோடு காலிசெய்ய வேண்டுகிறேன். மே 23ம் தேதியை ‘துரோகிகள் ஒழிப்பு தினமாக’ கொண்டாடும் அளவிற்கு அந்த நாள் நிச்சயம் அமையும். இவ்வாறு பேசினார்,

Tags : AIADMK ,DDV , AIADMK, DVV , Request
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...