மதுரை, மே 16: மதுரையை சேர்ந்த மணவாளன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8ம் தேதி நிகழவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20% ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உட்பட அந்தந்த மண்டல மொழி பேசும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை. கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில் விபத்து நிகழ்வு முக்கிய காரணமாக தகவல் தொலைத்தொடர்பில் ஏற்பட்ட மொழி பிரச்னையே என கூறப்படுகிறது.
திருச்சி மண்டலத்தில் 2,145 கார்டுகள் பணியாற்றும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. எனவே, ரயில்வே துறை பணிகளில் குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லாேகா பைலட், கார்ட்ஸ், பாய்ண்ட்ஸ்மேன் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர், இது குறித்து, தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.