×

கூட்டணி வைப்பதற்காக பாஜவுடன் பேசிவருவதாக நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார்: இல்லாவிட்டால் நீங்கள் விலக தயாரா? என தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின் சவால்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பாஜ கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்’ என்று ‘பச்சைப் பொய்’ யை பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பாஜவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்படியொரு ‘பொய்’ பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

 காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுகதான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் மோடியை ‘பாசிஸ்ட்’ ‘சேடிஸ்ட்’  ‘சர்வாதிகாரி’ என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, ‘மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வரவே கூடாது’ என்று சென்னையில் மட்டுமல்ல கொல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரசாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரசாரத்தை செய்திருக்கிறேன். நடைபெற உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் மே 23ம் தேதியுடன் பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

 இதைப் பொறுக்க முடியாத பாஜ மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அதிமுகவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு திமுகவை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். திமுகவின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பாஜகவை மிரட்டி விட்டது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று திமுக தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிகைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் ‘மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு’ காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் திமுகவிற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம். மேலும் நாடளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரசாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் ‘தப்புக் கணக்கு’ போட்டு தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார்.


 ஊழல் அதிமுகவும், மதவாத பாஜவும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படுதோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். திமுக, அதிமுக- பாஜ போல் திரைமறைவில் “தரகு” பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த நாடாளுமன்ற தேர்தலையும் திமுக சந்தித்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என்பதிலும் திமுக உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, திமுக தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23ம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்.  முதுகெலும்பில்லாத இந்த அதிமுக அரசைத் தூக்கியெறிவோம்.

 தமிழிசை சவுந்தரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் மோடியோ, “மத்தியில் ஆட்சி அமைக்க பாஜவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும், மாநில பாஜ தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : coalition ,Bhajan ,MK Stalin ,Tamils , Coalition Tamilnadu, MK Stalin, Challenge
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்