×

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் சபரிராஜன் வீட்டில் சோதனை சிபிஐ அதிகாரிகள் அதிரடி: மேலும் 3 பேர் சிக்குவதாக தகவல்

கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், மேலும் சில  முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார்,  மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் 28ம் தேதி இந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு  மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் முகாமிட்டு ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கும்  சென்று ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பேரில், மேலும் 3 பேர் விரைவில் கைதாவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, கைதான மற்றவர்களின்  வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பாலியல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டி வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Pollachi ,Sarojarajan , Pollachi, Sexual , Sabarirajan , CBI
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...