×

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவிலிருந்து வெளியேற திட்டமா?: நடிகை ஷபானா ஆஸ்மி விளக்கம்

மும்பை: மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் இருந்து வெளியேற தான் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை நடிகைஷபானா ஆஸ்மி கூறியுள்ளார். ஷபானா ஆஸ்மி அவரது கணவரும் பிரபல கவிஞருமான ஜாவேத் அக்தர் ஆகியோர் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளையும் சமூகத்தில் நடக்கும் தவறுகளையும் பகிரங்கமாக கண்டிப்பதையும் விமர்சிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத்தியில் பாஜ தலைமையிலான அரசு அமைந்த பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் விமர்சித்தனர். இதற்கு பாஜ ஆதரவாளர்கள் மற்றும் சங்பரிவார்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமரானால் கணவருடன் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக ஷபானா ஆஸ்மி கூறியதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி பரவி வருகிறது. இதனை ஷபானா ஆஸ்மி வன்மையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘நான் இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக ஒருபோதும் கூறியதில்லை. இது முற்றிலும் தவறான பொய்யான செய்தி. நான் இந்த நாட்டில்தான் பிறந்தேன். எனது மரணமும் இங்குதான் நிகழும். இது போன்ற தவறான செய்திகளை கண்டிக்கத்தான் முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், இதுபோன்ற பொய்யான செய்திகள் வேதனையளிக்கிறது. தோல்வி பயத்தில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Modi ,India ,Shabana Azmi , Is Modi planning to leave India if he is PM again? Actress Shabana Azmi
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி