இமாச்சல
பிரதேசத்தில் உள்ள சிம்லா, மண்டி, ஹமிர்பூர், கங்ரா ஆகிய 4 மக்களவைத்
தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே கடந்த சில தினங்களாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீிவ் காந்தி,
இந்திரா காந்தி, 1984 சீக்கிய கலவரம் குறித்து பிரதமர் மோடி தனது
பிரசாரத்தில் குறிப்பிட்டு பேசி வருகிறார். இந்நிலையில், உனா மாவட்டத்தில்
ஹமிர்பூர் தொகுதி வேட்பாளர் ராம் லால் தாகூரை ஆதரித்து நடந்த பிரசாரக்
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர்
பேசியதாவது:
பிரதமர் மோடி `கப்பர்சிங்’ (ஜிஎஸ்டி வரி) வரியின் மூலம்
வர்த்தகத்தை அழித்து விட்டார். அவரது அரசு நாட்டில் உள்ள 15 பணக்கார
தொழிலதிபர்களை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. மோடி தனக்கு அரசியல் என்னும்
கபடி விளையாட்டை கற்றுக் கொடுத்த பயிற்சியாளரான எல்.கே. அத்வானியை
ஓரங்கட்டி விட்டார். கடந்த சில நாட்களாக என் மீதும் என் தந்தை ராஜிவ்
காந்தி, பாட்டி இந்திரா காந்தி மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். ஆனால்,
பதிலுக்கு அவரை நான் அன்புடன் நேசிக்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.