×

திண்டுக்கல் சீனிவாசன் உளறல் பொங்கல் பரிசாக மாம்பழம் கொடுத்தோம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘பொங்கல் பரிசாக மாம்பழம் கொடுத்தோம்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் இருந்து கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணம் டி.டி.வி.தினகரன் கூட்டத்தினரிடம் தான் உள்ளது. இந்த பணத்தை வைத்துதான் தற்போது அரசியல் செய்கின்றனர். இது அதிமுக ஆட்சிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அரசியல் ஆண்மை இருந்தால் இவர்கள் வெற்றி பெறட்டும். ஒருவேளை இவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தால் கட்சியை கலைத்து விட்டு அரசியலை விட்டு போய் விடவேண்டும்’’ என்றார்.

மேலும் அவர், அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு உங்களுக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். பச்சரிசி, வெல்லம் கொடுத்தோம் என்று சொல்வதற்கு பதில் மாம்பழம் கொடுத்தோம் என்று உளறி கொட்டினார். இதுபோல் முந்திரி வழங்கினோம் என்பதற்கு பதிலாக கொடிமுந்திரி பழம் வழங்கினோம் என பேசி சிரிப்பலைகளை பரவச் செய்தார்.


Tags : Dindigul Srinivasan Prankal , Dindakal, Srinivasan Ravana, Pongal, Gift Mango
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்