சென்னை: ஃபானி புயல் பாதிப்புகளை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பான முறையில் கையாண்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பானி புயல், நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 முதல் 250 கிமீ வரை பலத்த காற்று வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன. நேற்று முன்தினம் இரவு வரை 8 பேர் பலியாகினர். இந்நிலையில், புயல் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 12 ஆக உயர்ந்தது. புதிதாக பலியான 4 பேரும் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பாரிபடா பகுதியில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சிக்கி இவர்கள் பலியாகினர். மின்கம்பங்கள் சாய்ந்ததால் 30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரில் மட்டுமே 10 ஆயிரம் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. புயலால் தாக்கப்பட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி மருத்துவமனை, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தீவிரமாக நடக்கிறது. ஒடிசாவில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், ஹவுரா, கூக்ளி, ஜார்கிராம் கொல்கத்தாவை தாக்கி விட்டு, வங்க தேசத்துக்குள் நுழைந்து பெரும் சேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம், மேற்கு வங்கத்தில் இந்த புயல் தாக்குதலால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகவும் அபாயகரமான புயலாக பானி கருதப்பட்டது. இருப்பினும், இதன் தாக்குதலில் பெரியளவில் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஐநா.வின் பேரழிவு குறைப்பு முகமையும் இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், `20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கியபோதும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த மிகவும் துல்லியமான கணிப்பால் இது சாத்தியமாகி இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபானி புயல் பேசிய கமல்ஹாசன், சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளையில், தமிழர்கள் இன்னும் கஜா புயலை நினைவுக்கூர்ந்து வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி