சேலம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 25ம் தேதி புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் மயில்சாமி சோதனையில் ஈடுபட்டிருந்தார். அடுத்தநாள் அதிகாலை 2.30 மணிக்கு காட்பாடி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஏ2 பெட்டியில் சந்தேகப்படும்படி ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை டிக்கெட் பரிசோதகர் மயில்சாமி மடக்கி பிடித்து விசாரித்தார். அதில் அவர், கேரள மாநிலத்தை சேர்ந்த குஞ்மைடு (42) என்பது தெரியவந்தது. அவர், காட்பாடியில் இருந்து சென்னை செல்ல பி 2 பெட்டியில் பயணிக்க டிக்கெட் வைத்திருந்தார். முதலில் பெட்டி மாறி ஏறிவிட்டதாக அவர் தெரிவித்தநிலையில், அவரது கையில் சந்தேகப்படும் படி 3 செல்போன்களும், பணமும் அதிகளவு இருந்தது. இதனால் டிக்கெட் பரிசோதகர், ரயில்வே போலீசாரை வரவழைத்து குஞ்மைடுவை ஒப்படைத்தார். ரயில்வே போலீசாரின் விசாரணையில், பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது. தற்போது கூட ஏசி பெட்டியில் பயணித்த பயணிகளிடம் இருந்து 3 செல்போன், 15 ஆயிரம் பணத்தை திருடியிருப்பது தெரிந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார், குஞ்மைடுவை கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி