மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு திரட்ட வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் படை, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் களமிறக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழு வீச்சுடன் களமிறங்கி உள்ளார். காங்கிரஸ் ஆதரவாளர்களாக உள்ள வெளிநாட்டு இந்தியர்கள் தங்களது பணி, வியாபாரத்துக்கு 2 வாரம் லீவ் போட்டுவிட்டு, டெல்லிக்கு வந்துள்ளனர். அனைத்து வசதிகளும் கொண்ட சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள பிட்ரோடா, அந்த பஸ்சில் அமெரிக்கா, கனடா, லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள், 100க்கும் அதிகமானோரை ஏற்றிக் கொண்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பம்பரமாக சுழன்று காங்கிரசுக்கு தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஜெயிக்கும் என உறுதியாக உள்ளோம். ஐந்து ஆண்டு பாஜ ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. காங்கிரசின் உன்னத குறிக்கோள்களை மக்கள் மத்தியில் பரப்புவோம். கட்சியின் நியாய் திட்டம், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்போம். கல்வி, வேலைவாய்ப்பால் இளைஞர்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அனுபவிக்கும் அல்லல், பெண்கள் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு சேர்ந்து காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கச் செய்வோம். அடுத்த ஒரு வாரத்துக்கு பிரசாரம் அனல் தெறிக்கும்’’ எனக் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி