காரைக்கால்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம். இவர் கடந்த பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், நிஜாம் அலி, முகமது பர்வீஸ், முகம்மது தவ்பீக், சர்புதீன், முகமது ரியாஸ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில், கடந்த 29ம் தேதி கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பினர், எஸ்.பி. சவுக்கத்அலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் ஒரு பகுதியாக, திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் சிறையில் உள்ள 11 பேரின் பெயர், முகவரி, குற்ற வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று, சம்பந்தப்பட்ட 11 பேரின் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 4 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பிற்பகல் 2 மணிவரை நீடித்த சோதனையில், 3 பைகளில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வீட்டில் இருந்த இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதேபோல், திருச்சி, தஞ்சை, கும்பகோணத்திலும் சோதனை நடத்தினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி