×

ஆலப்புழா அருகே 15 மாத பெண் குழந்தை கொடூர கொலை: தாய் கைது

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே 15 மாத குழந்தையை மூச்சு திணறடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் சேர்த்தலா அருகே உள்ள பட்டணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் (28). இவரது மனைவி ஆதிரா (24). இந்த தம்பதிக்கு ஆதிஷா என்ற 15 மாத பெண் குழந்தை இருந்தது. ஆதிரா தனது குழந்தையை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை தொடர்ந்து அழுவதால் எரிச்சல் அடைந்த அவர் குழந்தையை தாக்கி வந்துள்ளார்.

ஆதிஷா 8 மாத குழந்தையாக இருந்தபோது, மாமியார் பிரியாவை ஆதிரா, தேங்காய் துருவியால் தாக்கினார். இந்த வழக்கில் ஆதிரா கைது செய்யப்பட்டு குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தை திடீரென மயங்கி விட்டதாக பக்கத்து வீட்டுக்கு சென்று கூறியுள்ளார். உடனே அவர்கள் குழந்தையை சேர்த்தலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஆதிஷா இறந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறினர். அதைத் தொடர்ந்து ஆதிராவிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். குழந்தையின் உதட்டிலும் சிறு காயம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் சேர்த்தலா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆதிராவிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது தான் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். குழந்தையின் வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளார். குழந்தை அடிக்கடி அழுது வந்ததால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக தெரிவித்தார். ஆதிராவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : girl child ,Alappuzha , Alappuzha, girl child, cruel, murder, mother arrested
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!