டெல்லி : ஃபானி புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியது. ஃபானி எனப் பெயரிடப்பட்ட அந்த புயல், இன்று மாலைக்குள் அதிதீவிரமாக புயலாக வலுப்பெற்று வடமேற்கு பகுதி நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன் ஃபானி புயலானது, மே 1 ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் - தெற்கு ஆந்திரா கரைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வரும், பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி, ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஃபானி புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார். மேலும் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருக்குமாறும் மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கவும் நலமுடன் வாழவும் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி