திருமலை: தீவிரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால், ஏழுமலையான் கோயில் உட்பட முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. சந்தேக நபர்கள் தொடர்பாக வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை வழங்கியதை அடுத்து திருப்பதி எஸ்பி அன்பு ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி புறநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமலை, திருப்பதி, ஸ்ரீ காளஹஸ்தி உட்பட முக்கிய இடங்களில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது ஆட்கள் தென்பட்டால் உடனடியாக காவல்துறை அவசர எண்.100 அல்லது 8099999977 என்ற போலீஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே எஸ்பி உத்தரவுப்படி திருமலை ஏழுமலையான் கோயில் பஸ் நிறுத்தம், திருப்பதியில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி