* விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் அருகே தூதுகுழி குளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலமாக கருங்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழி பகுதியில் உள்ள விவசாயிகள் பலன் பெறுகின்றனர். இந்த குளத்தில் தேங்கும் நீரை பயன்படுத்தி பிசானம், கார் ஆகிய சாகுபடிகள் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் பாபநாசம் அணையிலிருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால், தற்போது பிசான சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்று முன்கார் சாகுபடி எனும் பழந்தொழி சாகுபடி காலத்தில் விவசாயிகள் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபடுவர். இந்த ஆண்டு தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி துவங்கி விட்டது. நாற்று நடவு துவங்கி 15 நாள்களில் களை பறிக்கும் பணி நடக்கிறது. வரும் 20 நாட்களில் வெள்ளரிக்காய் காய்க்க துவங்கிவிடும்.
விவசாயிகள் இந்த வெள்ளரி பிஞ்சை பறித்து நெல்லை திருச்செந்தூர் சாலையில் விற்பனை செய்வர். தற்போது பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் விரைவில் பூக்கள் பூத்து காய்கள் அதிகரிக்கும். இதுகுறித்து நாசரேத்தை சேர்ந்த வின்சென்ட் கூறியதாவது, நாங்கள் ஏப்ரல், மே மாதங்களில் கருங்குளம் பகுதி வெள்ளரிக்காயை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வோம். ஆனால் இந்த முறை வெள்ளரிக்காய் விளைச்சல் காலதாமதமாகிறது. மே மாதம் முதல் வாரம் வெள்ளரிக்காய் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு வெள்ளிக்காய் சாகுபடியில் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி