×

புனித வெள்ளி அனுசரிப்பு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர், நாளை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுத்த பெருவிழா ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய 46 நாட்கள் கிறிஸ்தவர்களின் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பார்கள். அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். ஏழை, எளியோருக்கு உணவு அளித்து தர்ம காரியங்களில் ஈடுபடுவது வழக்கம். கிறிஸ்தவர்களின் வீடுகளில் திருமணம் உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. தவக்காலத்தின் முதல் 40 நாட்களும் அனைத்து ஆலயங்களிலும் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன.

ஈஸ்டருக்கு முந்தைய வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சாம்பல் புதன், மற்றும் புனித வியாழக்கிழமை பாதம் கழுவும் நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று புனித வெள்ளி ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் தான், புனித வெள்ளி. இதையொட்டி நேற்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களில் தியானம், ஆராதனைகள் நடைபெற்றன. அருட்பணியாளர்கள், இயேசுவின் சிலுவைப்பாடு வசனங்களை சொல்லி மன்றாட்டு நடத்தினர். அதைத்தொடர்ந்து மாலையில் திருச்சிலுவை வழிபாடு நடைபெற்றது.புனித வெள்ளியைத் தொடர்ந்து உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவிலும், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் ஞாயிறு அதிகாலை 4.30 மணிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Easter ,churches , Good Friday, Adjustable, Church, Prayer, Celebration
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து