×

பண பட்டுவாடாவையும் மீறி தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கலிங்கப்பட்டியில் வைகோ உறுதி

திருவேங்கடம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த  பேட்டி: தேர்தல் களத்தில் மத்திய அரசின் அனைத்து அதிகார அமைப்புகள் குறிப்பாக புலனாய்வுத் துறையையும், வருமானவரி, அமலாக்கத் துறையையும் ஒருதலைப்பட்சமாக சோதனை  நடத்தினர். வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து  செய்தார்கள். இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லை.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதாக இருந்தால், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் ரத்து செய்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். எனவே மாநில அரசுக்கு  உதவுகின்ற விதத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்பட்டு இருக்கிறது.

ஆளுங்கட்சியினரின் பணபட்டுவாடாவையும் மீறி, தமிழகம், புதுவை  உள்ளிட்ட 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான  வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுக  வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரண்டாம் சுதந்திரப்  போர் என்று வர்ணிக்கப்படுகிற, ஜனநாயகமா? பாசிசமா? என்ற தேர்தலில் ஜனநாயகம்  வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வைகோவுடன் அவரது தம்பி வை.ரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,DMK ,Tamil Nadu ,Vyco , Tamilnadu, Puducherry, 39 constituencies, DMK alliance, success, Vaiko, confirmed
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி