துரைப்பாக்கம்: திருவான்மியூரில் பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திய காதலனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவின் (24). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த ஆம்பூரை சேர்ந்த காவியா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் இருவம் திருவான்மியூர் மாளவிகா மூன்றாவது அவென்யூவில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த கவின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவியாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் காவியா மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காவியாவை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனிடையே, கவினை அடித்து உதைத்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், காவியா கடந்த ஒரு மாதமாக கவினிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். நேற்று கவின் காவியாவை பார்க்க வந்தபோது, அவர் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த கவின், தயராக வைத்திருந்த கத்தியை எடுத்து காவியாவை குத்தி கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி