சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்களுக்கு 42 நாள் பயணப்படி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வாக்குப் பதிவு வரும் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மத்திய பாதுகாப்பு படையை தவிர்த்து தமிழக காவல் துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் காவலர்கள் தங்குமிடம், உணவு உள்ளிட்ட பல்வேறு ேதவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு 42 நாட்கள் பயணப்படி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதை ஆய்வு செய்த தமிழக அரசு காவலர்களுக்கு 42 நாட்கள் பயணப்படி வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை என்று மொத்தம் 42 நாட்கள் பயணப்படி வழங்கப்படும். இதுதொடர்பாக அனைத்து மண்டல ஐஜி மற்றும் டிஐஜி, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் காண்காணிப்பாளர்கள், ஆயுதப்படை கமாண்டர்கள், சிறப்பு காவல் படை ஆகியவற்றிற்கு தமிழக காவல் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி