பெங்களூரு: மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ரிஷ்வான் அர்ஷத்தை ஆதரித்து நடிகை குஷ்பு சி.வி.ராம்நகர் தொகுதிக்கு உள்பட்ட மர்பி டவுன்பகுதியில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில்: மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. அதே போல் வெளி நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து அனைவரின் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக தெரிவித்தார். அதையும் சரியாக செய்யவில்லை. ஆனால் தற்போது மக்களவை தேர்தல் நடைபெறுவதால் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். இவருக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்று கொடுக்க வேண்டும்.
அதே போல் பெங்களூரு மத்திய தொகுதியில் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் மேலவை உறுப்பினரும், வேட்பாளருமான ரிஷ்வான்அர்ஷத் தனது மேலவை உறுப்பினர் பதவியை பயன்படுத்தி பெங்களூரு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளார். இதனால் மக்களவை தேர்தலில் இவருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி மக்களவை தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவித்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மத்தியில் சிறப்பான ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். உடன் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், எம்.எல்.ஏ. ஹாரிஷ், முன்னாள் மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி உறுப்பினர் ஆனந்த்குமார் உள்பட பலர் இருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி