தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சுயேச்சை வேட்பாளர் சுமலதாவிடம் பிரசாரத்தை முடித்துக் கொள்ளுமாறு கூறிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதா, மத்தூர் தாலுகா தொட்டரசினகெரே கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கே.எம்.தொட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஐயண்ணகவுடா, சுமலதாவை பார்த்து, ‘‘தாயே... காலை முதல் இரவு வரை எதுவும் சாப்பிடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
இதனால் உங்கள் பிரசாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுமலதா, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். அப்போது அங்கிருந்த ஆதரவாளர்கள் சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது சுமலதா தனது ஆதரவாளர்களை சமாதானம் செய்தார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் சுமலதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி