×

கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கு: கைதான சதீஷ்குமாருக்கு 15 நாள் சிறை...பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவு

கோவை: கோவை கல்லூரி மாணவி பிரகதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க பொள்ளச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சதீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகதி என்ற மாணவி, கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரியில் இருந்து வெளியே சென்ற போது மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் மாணவியை தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி பிணமாக கிடந்தார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதேசமயம், மாணவி பிரகதிக்கு ஜூன் மாதம் 13-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரகதியை சதீஷ் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனதால் ஆத்திரமடைந்த சதீஷ், பிரகதியை கடத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து பிரகதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அவரது உடலில் கழுத்து மற்றும் மார்பகம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சதீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,Pallachchi , Coimbatore, college student, murder case, Satish Kumar, jail, Pollachi court
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...