மதுரையில் நேற்று காலை நடைபயிற்சியின்போது அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் தனக்கு ஓட்டளிக்குமாறு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் தாங்கள் செல்லும் இடமெல்லாம் ஓட்டு கேட்டு வருகின்றனர். மதுரை மக்களவை தொகுதிக்கு அதிமுக சார்பில் ராஜ்சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.
நேற்று காலை மதுரை எக்கோ பார்க்கில் சு.வெங்கடேசன் நடைபயிற்சி மேற்கொண்டவாறு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே பார்க்கில் நடைபயிற்சிக்கு அமைச்சர் செல்லூர்ராஜூ, மனைவியுடன் வந்திருந்தார். இருவரும் எதிரெதிரே சந்தித்து, மகிழ்ச்சியுடன் கை குலுக்கிக் கொண்டனர். பின்னர் தனக்கு அரிவாள், சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், வேட்பாளர் சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டார். இதனால் அங்கு கலகலப்பு காணப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி