கிருஷ்ணகிரி: பங்குனி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் மீது பூசாரி நடந்து ஆசி வழங்கி, அருள்வாக்கு கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னகாரகுப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜெய் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். பங்குனி அமாவாசையையொட்டி, நேற்று காலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூசாரி ரமேஷ் அருள்வாக்கு கூறினார்.
அப்போது, பிள்ளை வரம் வேண்டியும், திருமண தடையை நீங்கவும் என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து, ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோயில் முன் நீண்ட வரிசையில் படுத்திருந்தனர். அவர்கள் மீது அருள் வந்த பூசாரி ரமேஷ், கையில் தண்டாயுதத்துடன் ஆணி செருப்பு அணிந்து நடந்து சென்றார். விழாவில் சின்னகாரகுப்பம், காரகுப்பம், கொல்லப்பள்ளி, கொட்டிலேட்டி, சிந்தகம்பள்ளி, எமக்கல்நத்தம், பர்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி