×

எடப்பாடியும், தங்கமணியும் தமிழகத்தை அடகு வைத்துவிட்டனர்: திருச்செங்கோட்டில் டிடிவி தினகரன் பேச்சு

திருச்செங்கோடு: எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும் தமிழகத்தை அடகு வைத்து விட்டதாக,  திருச்செங்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே, நாமக்கல் மக்களவை அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா இருந்த வரை மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் கொண்டு வர விடவில்லை. ஆனால், அவர் மறைவிற்கு பிறகு, அனைத்து திட்டங்களையும் இன்று கொண்டு வந்துள்ளார்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால், வீட்டில் இருக்கும் நகைகளையோ அல்லது நில புலன்களையோ அடகு வைப்போம். ஆனால், எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும் தங்கள் கஷ்டத்திற்கு தமிழ்நாட்டையே அடகு வைத்து விட்டார்கள். எம்ஜிஆர் தோற்றுவித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை, டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.

தமிழகத்தை அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்து போட்டார் என்றால், சாராய மந்திரி தங்கமணி இரண்டாவது கையெழுத்து போட்டார்.  ஓட்டு கேட்க செல்லும் எடப்பாடி பழனிசாமி, பில்கேட்ஸ் போல ஒரு மைக்கை மாட்டிக் கொண்டு பேசி வருகிறார் என்றார். ஈரோடு வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து டிடிவி தினகரன் பேசுகையில், 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் கம்பெனியை மூட வேண்டியிருக்கும். அந்த கம்பெனி நிச்சயம் மூடப்படும். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவன்,விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளுகிறார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dtivi Dinakaran ,Tiruchengodu , TTV Dinakaran, Tiruchengodu
× RELATED திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ்...