வேலூர் : திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். வருமானவரித்துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட பேசியதால் தி.மு.கவினர் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். இதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.
மேலும் அருகே காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரிமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், துரைமுருகன் வீட்டிற்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வருமான வரி சோதனை குறித்து தகவலளித்து துரைமுருகன், வேலூர் காட்பாடியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போது நிறைவடைந்துவிட்டது என கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் கதில் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், அதனை சீர்குலைக்க எதிர்க்கட்சியும், மத்திய அரசும் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள் என்றும், சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது, நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம் என்றும் அவர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், பரபரப்பாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சோதனை நடத்துவதற்கான கால நேரம் இது அல்ல என்று கூறினார். மத்திய அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும், எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையை விட்டு முதுகில் குத்துகின்றனர் என துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி