புதுடெல்லி: நடிகர் தனுஷ் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்றும்,அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்பதால் மாதம் ரூ.65,000 பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் மேலூர் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் முறையிட்டார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் தனுஷின் ஒரிஜினல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மேலூர் கதிரேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. அதில் அவரது பெயர் மற்றும் பதிவு எண் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் வழக்கை ஒருதலை பட்சமாக விசாரித்து கீழமை நீதிமன்றமும் கால தாமதம் செய்துள்ளது. அதனால் மேற்கண்ட வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு அதாவது கேரளா அல்லது கர்நாடகா ஆகிய இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். அப்போது தான் இந்த விவகாரத்தில் உன்மை நிலவரம் வெளிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி