திருச்சி: முடிவுகளை அறிவிப்பதில் மறைந்த ஜெயலலிதா போலவே அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் செயல்படுவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியிருப்பது அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் இருந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேமுதிக பொருளாளர் பிரமேலதாவை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அவரை புகழ்ந்து தள்ளினார். அறிவிக்க வேண்டிய நிகழ்ச்சியை, அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்ற புரட்சி தலைவி ஜெயலலிதாவை போலவே பிரேமலதா செயல்படுவதாக கூறினார். ஜெயலலிதாவிற்கு பிறகு எங்களுக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார் தான். கூட்டணிப் பேச்சுவார்த்தை துவங்கியதிலிருந்து தே.மு.தி.க வேறு கூட்டணிக்குப் போகாது என நம்பிக்கையோடு இருந்தோம். அதன்படியே கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றதைப் போன்று தே.மு.தி.க தற்போது எங்களுடன் இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி என்றார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசிய போது விஜயகாந்த் நலம் பெற்று வருவதாக கூறினார். அடிக்கடி ஒளிமயமான எதிர்காலம் என்று துவங்கும் சிவாஜி பாடலையே அவர் முனுமுனுப்பதாக குறிப்பிட்டார். இதில் சிவாஜி என்பதற்கு பதிலாக எம்ஜிஆர் என அவர் குறிப்பிட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பேசிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருப்பார் எனத் திருச்சி தே.மு.தி.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி