சென்னை: பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). கால்டாக்சி டிரைவர். இவரது செல்போனுக்கு பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் இருந்து அரக்கோணம் செல்ல நேற்று முன்தினம் இரவு சவாரி ஒன்று பதிவானது. இதையடுத்து சதாம் உசேன், காருடன் அங்கு சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் மட்டும் காரில் ஏறி அரக்கோணம் சவாரி செல்ல வேண்டும் என கூறினார். எனவே அரக்கோணம் நோக்கி கார் புறப்பட்டது. பேரம்பாக்கம், இருளஞ்சேரி அருகே சென்றபோது சாலையோர கடையில் தண்ணீர் வாங்கி வருமாறு டிரைவர் சதாம் உசேனிடம் சவாரி சென்ற வாலிபர் கூறியுள்ளார்.
எனவே அவரும் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தண்ணீர் வாங்குவதற்கு கடைக்கு சென்றார். அப்போது சவாரி வந்த வாலிபர் திடீரென காரை ஸ்டார்ட் செய்து கடத்தி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சதாம் உசேன் மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் நம்பரை வைத்து காரை கடத்திச் சென்ற வாலிபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி