சென்னை: எனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்தும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டும். அதற்காக அனைத்து உயர் அதிகாரிகள் அலுவலக அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தனது அறையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும்படி உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார். நான்கு வாரங்கள் கடந்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தாதது குறித்து நிர்வாக பதிவாளரை அழைத்து விளக்கம் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உயர் நீதிமன்றத்தில் நிதி இல்லாவிட்டால் தனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்நிலையில், நேற்று மதியம் நீதிமன்றத்திற்கு நிர்வாக பதிவாளரை அழைத்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: எனது அறையில் கண்காணிப்பு ேகமரா பொருத்த வேண்டும் என்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை?.
உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளின் அறை பொதுவானது. அனைவரும் வரலாம். நீதிபதிகள் அறையிலும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. நீதிபதிகளின் அறைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதில் தர வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் விசாரணையை இணையதளத்தின் மூலம் ஒளிபரப்ப முயற்சி செய்யப்படும். வழக்கு வரும் 15ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த கேள்விகளுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி