×

அதிமுக தலைமையிலான கூட்டணியில் கோரிக்கை அடிப்படையில்தான் பாமக இணைந்துள்ளது : ராமதாஸ் அறிக்கை

சென்னை:  அதிமுக தலைமையிலான கூட்டணியில் கோரிக்கை அடிப்படையில்தான் பாமக இணைந்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் தான் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். கடந்த காலங்களில் அந்தப் பணிகளை பாமக செய்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் கூட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பாமக இணைந்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, பாஜ, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வது தான் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முதன்மைக் கடமையாக அமைய வேண்டும்.

அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதும் முக்கியமாகும். பாமகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் செயல்படுத்திய சுகாதாரத்துறை மற்றும் ரயில்வே துறை திட்டங்கள் ஏராளம். அனைத்துத் தொகுதிகளிலும் பாமக அளவிலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிட்டாலும் அதை சொந்தத் தொகுதியாக நினைத்து பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்ற வேண்டும். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த நிமிடத்தில் தொடங்கி வெற்றிக் கனியை பறிக்கும் வரையிலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டால் அவர்கள் நம்மை 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்து மக்களவைக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றியை பரிசாகக் கொடுத்து அதிமுக அரசை வலுப்படுத்துவார்கள் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PMO ,coalition ,AIADMK ,Ramadoss , Combination of the AIADMK-led coalition, request
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...