புதுடெல்லி : தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை, பாலங்கள், மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகள் விளம்பர பலகை வைப்பதற்கு எதிராக யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” நெடுஞ்சாலை, பாலங்கள், சாலையின் இருபகுதிகள், மலை மற்றும் வனப்பபகுதி ஆகிய இடங்களில் விளம்பர பலகை வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. அதேப்போல் மலை, வனப்பகுதியிலும் விளம்பர பலகைகள் வைப்பதாலும் விலங்குகள் அதிகம் பாதிப்படைகின்றன. அதனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சட்டவிதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தலைமை தேர்தல் ஆணைத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தமிழகத்தில் சட்ட விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியின் ஆதாரங்கள் கொண்ட படங்களை நீதிபதிகள் முன்னிலையில் சமர்பித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில்,”நெடுஞ்சாலை, மலைகள் மற்றும் வனப்பகுதி ஆகிய இடங்களில் விளம்பர பலகை வைத்தால் சுற்றுச்சூழல் என்பது பாதிப்படையாதா?. மேலும் வனப்பகுதியில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப் படுவதால் விலங்குகளுக்கு இடையூறாக இருக்காதா? என்று அடுக்கடுக்காக சரமாரி கேள்வியெழுப்பினர் நீதிபதிகள். சட்டவிதிகளை மீறி மாநிலம் முழுவதும் எங்கெங்கு விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தும், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உன்மைதான என்பது குறித்தும் பதில் மனுவை நீதிமன்றத்தில் 2வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் விளம்பர பலகை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
