சென்னை: சர்வதேச பெண்கள் தினத்ைத முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில், 2 ஏர் இந்தியா விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து சென்னைக்கும் இரண்டு விமானங்களை பெண்களே இயக்கினர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா ஏர்பஸ் 321 ரக விமானம் 175 பயணிகள், 7 விமான சிப்பந்திகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தை தலைமை விமானி தீபா, துணை விமானி விருந்தா நாயர் ஆகியோர் இயக்கினர்.
விமானத்தில் பொறியாளர் மற்றும் பணிப்பெண்களாக ஷாலினி, ஷகரியா, அஞ்சுலட்சுமி, ஆலீஸ், வர்னிதா ஆகியோர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர்களும் பெண்கள்தான். குறித்தநேரத்தில் இந்த விமானம் புறப்பட்டு காலை 9 மணிக்கு டெல்லி சென்றடைந்தது. பெண்களே இயக்கிய இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். அதில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறுகையில், ‘இது எங்களுடைய தினம், எங்கள் சகோதரிகள் இந்த விமானத்தை இயக்குகின்றனர். எனவே, நாங்கள் அச்சமின்றி மகிழ்ச்சியாக பயணம் செய்கிறோம்’ என்றனர்.
முன்னதாக தலைமை விமானி தீபா கூறுகையில், ‘கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச மகளிர் தினத்தன்று விமானங்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்லும் சர்வதேச விமானங்களையும் இயக்கி இருக்கிறோம். இதில் எவ்வித அச்சமும் இல்லை. பெண்கள் நினைத்தால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதற்கு நாங்கள் ஒரு முன்னுதாரணம்’ என்றார். பிறகு இதே விமானம் காலை 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 155 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் உட்பட 162 பேர் இருந்தனர். இந்த விமானம் நேற்று பகல் 12.50 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. பெண்களே இயக்கிய விமானத்தில் வந்த பயணிகள் உற்சாகமாக விமானத்தை விட்டு வெளியில் வந்தனர். அந்த பயணிகளிடம் கேட்டபோது, ‘நாங்கள் பலமுறை விமானத்தில் பயணம் செய்துள்ளோம். சில நேரங்களில் விமானம், வானில் பறக்கத்தொடங்கும்போதும் தரை இறங்கும் போதும் சற்று அதிர்வு காணப்படும். ஆனால், இன்றைய தினம் நாங்கள் பயணம் செய்த விமானம் அதுபோன்ற எந்த அதிர்வும் இல்லாமல் காற்றில் பறப்பதுபோல் இருந்தது’ என்றனர். சில பயணிகள், பெண்கள்தான் இந்த விமானத்தை இயக்கினார்களா? என்று நினைக்கும்படி எந்தவித வித்தியாசமும் இல்லாமல் இருந்தது என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி