×

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

மிண்டனாவ்: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தவாவ் நகரில் இருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில், கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை சரியாக 8.12 மணி அளவில் நிகழ்ந்ததாக பிலிப்பைன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செஸ்மொலாஜி அமைப்பு கூறியுள்ளது.

மேலும் நிலநடுக்கத்தின் அளவு முதலில் 6.0 அலகாக பதிவான நிலையில், பின்னர் 5.7 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அதிர்வுகள் கடலுக்கடியில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின. அருகில் உள்ள பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் சூயாகோ டெல் சர் மாகாணத்தின் பிஸ்லிக் சிட்டி மற்றும் டாவோ டால் சூர் மாகாணத்தின் டாவோ நகரில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,island ,Philippines ,Mindanao , Philippines, earthquake, Richter, 6.0 unit
× RELATED ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த...