×

கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குச் சொந்தமான குடோனில் ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சொந்தமான குடோனில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திக்குறிச்சி எனும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட புகையிலைப் பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டிச்சென்ற ரெசிப் மற்றும் கம்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், செறுகோல் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஏ.எம்.எஸ் ஏஜென்சி என்ற பெயரில் மெத்தை குடோன் வைத்திருப்பதாக கூறி பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்தக் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் குடோன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சேவியர் ராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. ஏஎம்சி எனும் ஏஜென்சிக்கு அந்தக் குடோனை வாடகைக்கு கொடுத்ததாக சேவியர் ராஜ் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IAS officer ,Kanyakumari , Kanyakumari,Gudka,Kanja,confiscation,IAS officer
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றம்...