குளச்சல்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா இன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடைவிழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசி கொடைவிழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30க்கு உஷ பூஜை நடந்தது. காலை 8 மணியளவில் திருக்கொடியேற்றம் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி, மாவட்ட பா.ஜ தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.ஏ.அசோகன், பொருளாளர் திலக், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், திருக்கோயில் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், தந்திரி மகாதேவரு ஐயர், மேல்சாந்திகள் சட்டநாதன் குருக்கள், வினீஷ் குருக்கள், விக்னேஷ் குருக்கள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கம், ஸ்ரீதேவி கலா மன்றம், தேவி சேவா சங்கம் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் 82வது மாநாடு கொடியேற்றம் நடந்தது.
விழாவில் வலம்வரும் தங்கத்தேர்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் அர்ப்பணிக்கப்பட்டது. ஆனால் தேரை பக்தர்கள் இழுப்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. ேமலும் தேர் வலம்வரும் நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. இது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வந்தது. தேரில் அம்பாள் வலம்வர ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று மாலை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் மாசி கொடைவிழா நடக்கும் 10 நாட்களும் தங்கத்தேர் கோயிலில் வலம்வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி