ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் 90 சதவீதம் மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடப்பது வழக்கம். நேற்று நடந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமன்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனாவை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். இதனால், சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், `இந்த வார சந்தையில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து குறைவுதான். நேற்று நடந்த சந்தையில் 400 பசு மாடுகள், 350 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் என 950 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இவற்றில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது. கோடை சீசன் துவங்கி விட்டதால் இனி வரக்கூடிய வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி