சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்து தோழமைக் கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பேச்சு நடத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 1 இடம் ஒதுக்கப்பட்டது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அப்போது துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட தொகுதி பட்டியல்களை வைத்து கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி