சோழவந்தான்: அதிமுகவில் இருப்பது டெண்டர்கள், பாமகவில் இருப்பது குண்டர்கள் என்று கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டி: உடல் நலக்குறைவை விட மன அழுத்தத்தால்தான் மருத்துவமனையில் ஜெயலலிதா அதிகம் பாதிப்பிலிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக மத்திய அரசுடன் கூட்டு வைத்து கட்சிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்த வேதனைதான் ஜெயலலிதாவை மன பாதிப்புக்குள்ளாக்கியது. ஆகையால் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் ஓபிஎஸ் தான். அதனால்தான் விசாரனை ஆணையம் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் பயத்தில் தவிர்த்து வருகிறார்.
அதிமுகவில் இருப்பது டெண்டர்கள், பாமகவில் இருப்பது குண்டர்கள். ஜெயலலிதா விடுதலையானபோது கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை, பாமக தலைவர் மணி உள்ளிட்டோர் சந்தித்து, மேல்முறையீடு செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்கக் கோரி மனு கொடுத்தனர். அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், தொண்டர்கள் கொதிப்பில் உள்ளனர். நாங்கள் தனியாக நிற்பதுபோல இவர்கள், கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க தயாரா?’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி