ஓசூர் : ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில், 15 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதிக்கு கடந்த மாதம் வந்த யானைகளை வனத்துறையினர் போராடி ஜவளகிரி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்த நிலையில், கடந்த வாரம் 5 காட்டு யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இவைகளை தொடர்ந்து நேற்று அதிகாலை 10 யானைகள் ஓசூருக்கு படையெடுத்து உள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். தற்போது இந்த 15 காட்டு யானைகளும் 2 குழுக்களாக சானமாவு வனப்பகுதியில் உலா வருவதால், அதை சுற்றியுள்ள பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், போடூர் உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வனத்துக்குள் செல்ல வேண்டாமென்றும், இரவு நேர பயணங்களை தவிர்த்து வீட்டின் முன்பக்க மின்விளக்குகளை தொடர்ந்து எரியவிடுமாறும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி