பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதியில் வறட்சியால் பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கருகிய வயல்களில் மாடுகளை மேயவிடும்அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, போர்வெல் அமைக்க மானிய கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி. இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை இல்லை. வறட்சியால் விவசாயம் குறைந்து கொண்டே வருகின்றது. கடன் வாங்கி ஒரு சில விவசாயிகள் போர்வெல் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். கடும் வெயில் அடித்து வருவதால் போர்வெல்லிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் பொன்னமராவதி பகுதியில் ஆலவயல், கண்டியாநத்தம், மைலாப்பூர், கருப்புக்குடிப்பட்டி, திருக்களம்பூர், கல்லம்பட்டி, சடையம்பட்டி, கார்ணாபட்டி, நல்லூர், மேலநிலைநிலை, செவலூர் உள்ளிட்ட பல இடங்களில் போர்வெல் நீரைக்கொண்டு பல ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றதால் போர்வெல்லிலும் நீர் வரவில்லை. இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டது. கண்டியாநத்தம் பகுதியில் கருகிய வயல்களில் விவசாயிகள் மாடுகளை மேயவிட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் குறைந்த அளவில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. குைறந்த அளவிலான நெல்லை விவசாயிகள் கையிலே கதிரடித்து வருகின்றனர்.. இப்பகுதிகளில் போதிய மழையின்றி பல நூறு ஏக்கர் நெற்பயிர்கள் கருகிவிட்டது. அறுவடை மிகக்குறைவு உள்ளதால் விவசாயிகளுக்கு கண்ணீர் விட்டு வருகின்றனர். எனவே நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிபந்தனையும் இன்றி போர்வெல் அமைக்க ரூ.50ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி