புதுச்சேரி: அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களிடம் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் திமுக மற்றும் சுயேச்சை என 18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி எம்எல்ஏ அசோக் ஆனந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் பலம் 12லிருந்து 11 ஆக குறைந்தது. இதற்கிடையே பாஜவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் பலம் 14 ஆக அதிகரித்தது. இதனால் ஆட்சியை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதி திட்டம் தீட்டுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று, புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்தை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து புகார் கொடுத்தனர்.
அதில், ``அரசியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைப்பாட்டில் இருந்து மாறும்படி அடிக்கடி செல்போனில் தொந்தரவு செய்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கூறியுள்ளனர்.இதையடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கம் கூறும்போது, ``எம்எல்ஏக்களின் புகார் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்துவருகிறோம். அவர்களுக்கு தற்போதைய அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து மாற வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் வழங்கவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேசிய நபர்களின் நோக்கம், அடிப்படை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி