சென்னை: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலனை கண்டுபிடிக்க வேண்டும். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சமூக இயக்கங்களின் கூட்டமைப்பினர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.புகார் மனுவில் கூறியுள்ளதாவது: ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் திருட்டு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த முகிலன் கடந்த 15ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் தென்மண்டல காவல்துறை உயரதிகாரிகளின் பங்கு தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு மதுரை செல்ல எழும்பூர் ரயில்நிலையம் சென்றுள்ளார். பின்னர் 10 மணியளவில் ரயில்
நிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் ரயில் நிலையத்திற்கு செல்லவில்லை என்பது அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காணாமல் போன அவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி