பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் வீடியோ பதிவு வாயிலாக வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவுகளை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உள்ளூர் போலீஸ் உயர் அதிகாரி எம்.என் நாகராஜ் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர். வீடியோ காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து வாங்கிய போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தேசவிரோத வாசகங்களை முழங்கிய வாலிபர், ஆபாச வார்த்தையுடன் கூடிய தொனியில் ஹுப்பள்ளி விமான நிலையத்தை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக கூறியிருந்தார். இது தவிர இந்தியாவையும் இழிவுபடுத்தும் வகையில் சில வார்த்தைகளை அவர் பதிவிட்டிருந்தார்.இந்த தகவல் உள்துறை அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் வீடியோ காட்சிகளை சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் வாலிபர் ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தபடி அந்த வீடியோவை பதிவு செய்து, ஹுப்பள்ளி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி